
- News18 Tamil
- Last Updated: January 29, 2020, 09:10 IST
10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாதிரி வினாத்தாளிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது என அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அரசு தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 10,11 மற்றும் 12ஆம் பொதுத்தேர்விற்கு Blue Print எனப்படும் வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், புத்தகத்தின் எந்த பக்கத்திலிருந்தும் பாடம் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாதிரி வினாத்தாள் என்பது வினாத்தாள் வடிவமைப்பு, அதன் பிரிவுகள், மதிப்பெண் ஒதுக்கீடு பற்றி அறிந்து கொள்ளவதற்காகத்தான் என்றும், மாதிரி வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்களை தேர்வில் கேட்க வேண்டும் என்ற கட்டாயமில்லை எனவும் தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
இருப்பினும் மாதிரி வினாத்தாள்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது என்பதும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் மாணவர்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பு புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அரசு தேர்வுத்துறை இயக்ககம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.