
- News18 Tamil
- Last Updated: March 03, 2021, 12:35 IST
- SADAIYANDI News18 Tamil Nadu
மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பா.ஜ.க சார்பில் "வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்" என்ற பெயரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழக தேர்தல் துணை பொறுப்பாளர் வி.பி.சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய ஹெச்.ராஜா, ’மு.க.ஸ்டாலின், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோர் தமிழகத்தின் தீய சக்திகள். இவர்கள் அனைவரும் பலூன் விடும் ஸ்கூல் பிள்ளைகள். இந்த ஸ்கூல் பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால் மத்திய அரசு திட்டம் எதும் தமிழகத்திற்கு வராது.
சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி மட்டும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு போக பயந்துகொண்டு ராஜினாமா செய்தார். கருத்துக்கணிப்பில் தி.மு.க வெற்றி பெறும். ஆனால் தேர்தலில் வெற்றி பெறாது எனவும் கூறினார். கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றியவர்கள் பொருளாதார புடலங்காயான மன்மோகன் சிங், மற்றும் எங்க ஊர் ப.சிதம்பரம்’ என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.
நிகழ்ச்சியின் போது கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிருக்கு கேஸ் அடுப்பு, மிக்சி, இண்டக்ஸன் ஸ்டவ், கவரிங் நகை செட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.