
- News18 Tamil
- Last Updated: March 03, 2021, 11:58 IST
தூத்துக்குடியில் நடைபெற்று வரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 ஆவது பொது குழு கூட்டத்தில் சரத்குமார் மீண்டும் தலைவராகவும் பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். முதன்மை துணைப் பொதுச்செயலாளராக ராதிகா சரத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 ஆவது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள திரவியபுரத்தில் இன்று காலைதொடங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக கட்சியின் தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
புதிதாக கட்சியில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மை துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக A.N. சுந்தரேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்படவர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.
கட்சியின் நிர்வாகிகளின் வாழ்த்துரைக்கு பின்னர் சரத்குமார் சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அகில இந்திய சமத்துவ மக்கள் சட்சி, ஐஜேகே இணைந்து மாற்றத்திற்கான புதிய கூட்டணியை உருவாக்கின. மாற்றத்தை விரும்பும் கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம் என்றும், வரும் நாட்களில் மாற்றத்திற்கான கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் எனவும் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர். இதனைத் தொடர்ந்து, சசிகலாவை சந்தித்துப் பேசினர்.
தாங்கள் அமைத்துள்ள கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பும் கட்சிகளை வரவேற்பதாகவும், கூட்டணியில் இணையக் கூடிய அனைத்து கட்சிகளுக்குமே சமமான தலைமைதான் இருக்கும் எனவும் சரத்குமார் தெரிவித்தார். மேலும், நாட்டிற்கு மாற்றத்தைத் தரவேண்டும் என்று எண்ணத்தில், இதை உருவாக்கியுள்ளோம். மாறத்தை எதிர்பாப்பவர்களுக்காக இந்த கூட்டணி உருவாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.
எல்லா மத, இன மக்களை ஒன்றாக பார்க்கும் தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். மக்கள் நலனுக்கானவர்களாக இருக்க வேண்டும் என்று கூறிய சரத்குமார், இது மாற்றத்திற்கான முதல் கூட்டணி என்றும் தெரிவித்தார். நாங்கள் மாற்றம் வேண்டும் என்பதில் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்கின்றோம். எங்களைப் போல் பலர் உள்ளனர். அவர்களையும் இந்த கூட்டணியில் இணைய அழைக்கிறோம் என்றார்.
Must Read: ஐஜேகே-சமக புதிய கூட்டணி: கமல், ரஜினி மக்கள் மன்ற தொண்டர்களுக்கு அழைப்பு
மேலும், ரஜினி மக்கள் மன்றம் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினால் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்தார். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராக உள்ளனர் என்றார் சரத்குமார். அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.