
- News18 Tamil
- Last Updated: March 03, 2021, 12:12 IST
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு 69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய மாநிலங்களில் தமிழகத்தில் மட்டுமே 69 சதவீதம் வரை இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. இந்த இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தினேஷ், காயத்ரி உள்ளிட்ட பலர் மாணவ, மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘ஓ.பி.சி இடஒதுக்கீடு தொடர்பான மகாராஷ்டிரா வழக்கு தற்போது அரசியல்சாசன அமர்வு விசாரணையில் உள்ளது. அதனுடன் தமிழக இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கையும் விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், ‘தமிழகத்தில் வழங்கப்பட்டுவரும் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு முறைப்படி வழங்கப்படுகிறது’ என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘தமிழக அரசின் இடஒதுக்கீடு விவகாரத்தை அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினரின் இட ஒதுக்கீடு தொடர்பான விசாரணை அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருவதால், அவ்வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகு தமிழக அரசின் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி அமர்வு உத்தரவிட்டுள்ளது.