நாமக்கல்: கொசவம்பட்டி ஏரியில் குப்பைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள், பொதுமக்கள் அவதி!
நாமக்கல் அடுத்துள்ள கொசவம்பட்டி ஏரியில் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
நாமக்கல் அடுத்துள்ள சேந்தமங்கலம் சாலையில் கொசவம்பட்டி ஏரி உள்ளது. நாமக்கல் நகர் பகுதி மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியில் அவ்வபோது குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும், அவற்றிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பதால் அதிகளவில் புகை ஏற்பட்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் டயர் போன்றவற்றிற்கு தீ வைப்பதால் கரும்புகை காற்றில் பரவி அப்பகுதி மக்கள் மூச்சுவிடுவதற்கு சிரமமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நாமக்கல் கொசவம்பட்டி ஏரியில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் அதிகளவில் புகை ஏற்படுவதாகவும் 24 மணி நேரமும் இப்பகுதியில் குப்பைகள் எரிந்து வருவதாகவும் இதனால் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஆகியவை ஏற்படுவதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலத்திடம் இதுபற்றி நாம் கேட்டபோது, குப்பைகளை கொட்டாதவாறு அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைத்துள்ளதாகவும் இருப்பினும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டிவிடுவதாகவும் அவற்றை கண்காணிக்க குழு ஒன்றை அமைப்பதோடு கண்காணிப்பு கேமரா வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.