டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடுமையான விவாதம் நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு திங்கட்கிழமை தொடங்குகிறது. கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு, மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், டெல்லி வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, “நூற்றுகணக்கான மக்களின் மீது தாக்குதல் நடத்தி பாசிச வெறியாட்டம் டெல்லியில் நடத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது வன்முறை ஏவி விடப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் மீது தோடுக்கப்பட்டுள்ள தாக்குதல், கண்டிப்பாக இந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் இது குறித்து கடுமையான விவாதம் நடைபெறும்.
இலட்சக்கணக்கான மக்களைக் கொன்ற இலங்கை அரசு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகளுக்கு பன்னாட்டு விசாரணைக்கு இடம் தரமாட்டோம் உள்நாட்டு விசாரணையும் கிடையாது என கூறி வருகிறது. இலங்கை அரசின் நிலைப்பாட்டைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஜனநாயக மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட், ஏற்கனவே ஒப்புக்கொண்ட விசாரணையைத் தவிர்த்து விட்டு மாற்று முயற்சி செய்வது வருத்தமளிக்கிறது.
இலங்கை அரசு நியமிக்கும் நீதிபதி விசாரணை ஆணைக் குழுவை ஏற்க முடியாது. ஐ.நாவின் பொதுச் செயலாளர் சி.ஏ.ஏ திருத்த சட்டம் பற்றி தனது கவலையை தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காமல், தன் நிலையில் பிடிவாதமாக இருக்கும் போக்கை அரசு மாற்றி கொள்ள வேண்டும்.” என்று வைகோ கூறினார்.
மேலும் படிக்க: CAA போராட்டத்தின் நினைவாக பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய தம்பதி!